சிவகங்கை: நாட்டுப்பசு மாட்டில் கிடைக்கும் பொருட்களை வீணாக்காமல் பயிர்களுக்கு பயன்படுத்த விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிவகங்கை விதைசான்று மற்றும் அங்ககசான்று உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: மண் பரிசோதனை பரிந்துரைப்படி உரமிட்டால் தேவைக்கு ஏற்ப சத்துக்கள் பயிருக்கு கிடைக்கும். குறிப்பாக தழைச்சத்து தரும் யூரியா அதிகம் இடுவதால் பூச்சிகள் அதிகம் பயிரை பாதிக்கின்றன. முன்பு விவசாயத்தில் நாட்டு பசுமாடு முக்கிய பங்கு பெற்றது. காலப்கோக்கில் கிடை அமர்த்துவது, வயலுக்கு குப்பை அடிப்பது மேலும் பசுந்தழை உரங்களான எருக்கு, கொழிஞ்சி இலைகளை இட்டு மடக்கி உழவு செய்வது போன்ற செயல்கள் குறைந்துவிட்டன. பசுமாட்டில் கிடைக்கும் ஜந்து வகையான பொருட்களான சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகியவற்றை முறையாக பயன்படுத்தினால் உரம் வாங்க வரிசையில் நிற்க வேண்டியதில்லை. எனவேதான் நாட்டுபசுமாடு நடமாடும் உரக்கடை என அழைக்கப்படுகிறது. அமுதகரைசல், பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம் போன்ற அங்கக உரங்கள் தயாரிக்க ஐந்து பொருட்களும் தேவை. மாட்டு கோமியத்தில் லட்சகணக்காண நலம் தரும் நுண்ணுயிர்கள் உள்ளன.