புதுடெல்லி: உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து சுமார் 3,000 இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் ஒன்றிய வெளியுறவு துறை ஈடுபட்டுள்ளது. ‘ஆபரேஷன் காவிரி’ என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் மக்களை பரிசோதிப்பதற்காக ஒன்றிய சுகாதாரத் துறையும், வெளியுறவு துறையுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. சூடானில் இருந்து இதுவரை 2,400 இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில் அவர்களில் 117 பேருக்கு மஞ்சள் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி போடப்படாததால், அவர்களை தற்போது தனிமைப்படுத்தி வைத்துள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்:
இதுவரை மொத்தம் 2,400 பேர் சூடானில் இருந்து மீட்கப்பட்டு இந்தியா திரும்பி உள்ளனர். அவர்களில் 117 பேருக்கு மஞ்சள் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி போடப்படவில்ைல. அதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மஞ்சள் காய்ச்சல் அறிகுறி ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே, அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.