புதுடெல்லி: ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாருக்கு டெல்லி மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் கைதான முதல்வர் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் வௌியே வந்துள்ளார். இதையடுத்து அவரை சந்திப்பதற்காக ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினரும், டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான ஸ்வாதி மாலிவால் கடந்த திங்கள்கிழமை கெஜ்ரிவாலின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கி விட்டதாக சிவில்லைன் காவல்நிலையத்தில் மாலிவால் புகார் கூறினார். ஆனால் எழுத்துப்பூர்வமான எந்த புகாரையும் அளிக்கவில்லை. இந்நிலையில் இந்த விவகாரத்தில் டெல்லி மகளிர் ஆணையம் தானாக முன்வந்து கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. அதில், “மாலிவால் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு வௌ்ளிக்கிழமை(இன்று) காலை 11 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.