அதனால், வானிலை அமைப்புகளை கண்காணிப்பதில் ரேடார்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்துடன் தமிழ்நாடு அரசு இணைந்து இரண்டு ராடார்களை மேம்படுத்தியுள்ளன. இவற்றின் மூலம் தென் மாவட்டங்களில் வானிலை நிலவரங்களை நாம் கண்காணிக்க முடியும். இந்த ரேடார்கள் ஏறக்குறைய 1000 தானியங்கி வானிலை நிலையங்களையும் விரிவாக்கம் செய்கின்றன. இவற்றின் மூலம் துல்லியமான மற்றும் மேம்பட்ட வானிலை புள்ளி விவரங்களை பெற முடியும்’’ என்று தெரிவித்தார்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறும்போது, ‘‘சேலம் மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் அதிகபட்ச பரப்பளவை கண்காணிக்கும் வகையில் ரேடார்களை பொருத்துவதற்கும், மின்காந்த குறுக்கீடு இல்லாமல் அவை வேலை செய்வதற்குமான பரிட்சார்த்த பணிகள் தற்போது நடக்கிறது’’ என்றார். இதுதவிர நீண்டகாலம் பணியாற்றிய பின் நீக்கவேண்டிய நிலையில் சென்னை துறைமுகம், ஸ்ரீஹரிகோட்டா ஆகிய இடங்களில் உள்ள ராடார்களை நீக்கிவிட்டு புதிய ரேடார்கள் பொருத்தும்பணி நடக்கிறது. இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதியில் புயல்களை கண்காணிப்பதற்காக 4 எஸ்-பெண்ட ராடார்களை பொருத்தவும் இந்திய வானிலை மையத்துக்கு எண்ணம் இருப்பதாக வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘‘கணினி சக்தியை பயன்படுத்தும்போது, வானிலை மாதிரிகளின் முடிவுகள் குறிப்பிட்ட அளவில் மேம்பட வாய்ப்புள்ளது. இவை 5 மாதங்களில் மேம்படுத்தப்படும். அத்துடன் வானிலை முன்னறிவிப்புகளுக்கு மாதிரிகளும், கண்காணிப்புகளும் முக்கியமானவை. தற்போது 10 கிமீ முதல் 20 கிமீ தூரத்துக்கான தெளிவான மாதிரி முடிவுகள் இருக்கின்றன. கணினியின் வேகத்தை அதிகரிக்கும் போது 6 கிமீட்டருக்கான தெளிவான முடிவுகளை அடுத்தஆண்டில் பெற முடியும். ஆனால் நமது நோக்கமே 1 கி.மீ.க்கான தெளிவான முடிவுகளை எட்டுவதுதான்’’ என்றார்.