அங்காரா: சர்வதேச மாநாட்டில் உக்ரைன் எம்.பி. ஒருவர் ரஷ்ய பிரதிநிதியை சரமாரியாக தாக்கிய காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. துருக்கி தலைநகர் அங்காராவில் கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் சர்வதேச மாநாடு நடைபெற்றது. கருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த அமைப்பின் மாநாடு உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி 14 மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக நடைபெற்றது. மாநாட்டில் கலந்துக்கொண்ட உக்ரைன் எம்.பி. ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கி தனது நாட்டு கொடியுடன் இருந்தபோது ரஷ்ய பிரதிநிதி ஒருவர் அதனை பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் சற்றும் தாமதிக்காத உக்ரைன் எம்.பி., ரஷ்ய பிரதிநிதி மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார். டிரோன் தாக்குதல் மூலம் ரஷ்ய அதிபர் புதினை கொல்ல அமெரிக்கா உதவியுடன் உக்ரைன் சதி செய்ததாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. அதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்த நிலையில், இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே ரஷ்ய பிரதிநிதி ஒருவரை உக்ரைன் எம்.பி. ஒருவர் தாக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருவது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.