லண்டன்: ரஷ்யா உடனான போரில், உக்ரைனுக்கு ஆயுதங்கள், பயிற்சி கொடுத்து ஆதரவு அளிப்பதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உறுதி அளித்தார்.
ரஷ்யா உடனான போரை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களை கடந்த வாரம் முதல் தொடர்ந்து சந்தித்து வருகிறார். முதலில் ஜெர்மனி, இத்தாலி நாடுகளுக்கு சென்ற அவர் அந்நாடுகளின் தலைவர்கள் மற்றும் போப் பிரான்சிஸை சந்தித்தார். அதன் பின்னர், நேற்று முன்தினம் பிரான்ஸ் சென்ற ஜெலன்ஸ்கி அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்தார். இந்நிலையில், முன்னறிவிப்பின்றி திடீரென அவர் நேற்று இங்கிலாந்து சென்றார்.
அவரை வரவேற்ற பிரதமர் ரிஷி சுனக், ரஷ்யா உடனான போரில் உக்ரைனுக்கு உதவுவதாக உறுதி அளித்தார். இது குறித்து பேசிய சுனக், “கடந்த ஓராண்டாக உக்ரைன் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலில் அந்நாடு விடுபட நிலையான ஆதரவு தேவை. சர்வதேச சமூகம் அதற்கு உதவ வேண்டும். இந்த போரில் உக்ரைன் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்த, உக்ரைனுக்கு பீரங்கிகள், ஆயுதங்கள், கவச வாகனங்கள் மற்றும் பயிற்சி அளித்து இங்கிலாந்து உதவும்,” என்று தெரிவித்தார்.