டூவீலர்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இதனை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என, ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வாகன விற்பனை ஒட்டுமொத்த அளவில் அதிகரித்திருந்தாலும், டூவீலர் விற்பனை உயரவில்லை. 2018ம் ஆண்டு 13.3 லட்சம் டூவீலர்கள் விற்றிருந்த நிலையில், கடந்த 2022ல் 10.7 லட்சமாக குறைந்து விட்டது. 2018க்கு பிறகு விற்பனை உயரவே இல்லை.
2016ம் ஆண்டு விலையுடன் ஒப்பிடும்போது, டூவீலர்கள் விலை, மாடலுக்கு ஏற்ப 80 சதவீதம் வரை அதிகரித்து விட்டது. டூவீலர் அனைவருக்கும் அத்தியாவசிய தேவையாக உள்ளது. எனவே, ஆடம்பர பொருளாக கருதாமல், டூவீலருக்கான ஜிஎஸ்டியை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள், கனரக தொழிற்துறை அமைச்சகம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துக்கு டீலர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.