இன்று முதல் இயக்கப்படுவதாக அறிவித்த தி.மலை- சென்னை பீச் பாசஞ்சர் ரயில் திடீர் ரத்து: பொதுமக்கள், பக்தர்கள் ஏமாற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை- சென்னை பீச் ஸ்டேஷன் வரை இயக்கப்படும் என அறிவித்திருந்த தினசரி பாசஞ்சர் ரயில் சேவை நிர்வாக காரணங்களால் திடீரென ரத்து செய்திருப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, திருவண்ணாமலை நகருக்கான ரயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை இருந்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை-சென்னை இடையே தினசரி இயக்கப்பட்ட பாசஞ்சர் ரயில் சேவையை, மீண்டும் இயக்க வேண்டும் என பக்தர்கள் அந்த பகுதி பொதுமக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து வேலூர் கண்ட்டோண்மென்ட் வரை தினசரி இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலை, தினமும் திருவண்ணாமலை வரை நீட்டித்து கடந்த வாரம் தெற்கு ரயில் திருச்சி கோட்டம் உத்தரவிட்டது.

அதோடு, இந்த ரயில் சேவை இன்று(2ம் தேதி) மாலை 6 மணிக்கு சென்னை பீச் ஸ்டேஷனிலும், திருவண்ணாமலையில் நாளை(3ம் தேதி) அதிகாலை 4 மணிக்கும் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இதனால் பொதுமக்கள் ெபரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்நிலையில், நிர்வாக காரணங்களால் அந்த ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் நேற்று மாலை அறிவித்திருக்கிறது. மேலும், மீண்டும் இந்த ரயில் சேவை எப்போது இயக்கப்படும் என்ற விபரமும் அதில் இடம் பெறவில்லை. இந்த திடீர் அறிவிப்பால், பொதுமக்களும், பக்தர்களும் பெரிதும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

Related posts

தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து நடிகையை சீரழித்த வழக்கு; கோயில் பூசாரி கார்த்திக்கை பிடிக்க தனிப்படை அமைப்பு

சிசோடியா நீதிமன்ற காவல் 30ம் தேதி வரை நீடிப்பு

ஈரானில் 8 மாதமாக சிறையில் தவிக்கும் இந்திய கப்பல் பணியாளர்கள் 40 பேரை விடுவிக்க கோரிக்கை: ஒன்றிய அமைச்சர் நேரில் வலியுறுத்தல்