10 மசோதாவையும் ஜனாதிபதிக்கு அனுப்ப அதிகாரம் இல்லை; ஒப்புதல் தர வேண்டிய கட்டாயத்தில் ஆளுநர்: ஆளுநருக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்

டெல்லி: தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் நிலுவையில் வைக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும். ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்’ எனக்கோரி உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் மனு தாக்கல் ெசய்யப்பட்டது. இம்மனுவானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த 10ம் தேதி நடத்திய விசாரணையின் போது, ஆளுநரின் செயல்பாடு தொடர்பான விவகாரம் மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாக கூறியது. மேலும், ‘அரசியல் சாசனம் 200வது பிரிவின்படி சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத நிலையில், மறுபரிசீலனைக்காக கூடிய விரைவில் ஆளுநர் சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

அப்படி திருப்பி அனுப்புகிற மசோதாவை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் அதற்கு தாமதம் இல்லாமல் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். ஒன்றிய அரசின் உள்துறை செயலாளர் மற்றும் ஆளுநரின் செயலாளர், இம்மனுவுக்கு பதிலளிக்க வேண்டும்’ எனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். இதேபோன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மற்றொரு மனுவில், ‘தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துகிறார். சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்கிறார். மாநில அரசின் கருத்துக்களை ஏற்க மறுக்கிறார்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்ததோடு, தமிழக ஆளுநரின் நிலைப்பாட்டை கேட்டு தெரிவிக்குமாறு ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.

இந்த சூழலில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்களுக்கு, தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். அதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில், கடந்த 18ம் தேதி சட்டமன்ற சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட பல்கலைக்கழகங்கள் ெதாடர்பான 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, மீண்டும் அவற்றை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, நேற்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை, ஆளுநர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்வார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, வில்சனும், ஆளுநர் சார்பில் ஒன்றிய அரசின் வழக்கறிஞர்கள் வெங்கட்ரமணி, துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகினர். தமிழ்நாடு அரசின் சார்பில், ‘ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட முடியாது. எந்த காரணத்தையும் கூறாமல் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். 8 கோடி மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது. ஆளுநரின் செயலால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு வழங்கி உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டது. தொடர்ந்து ஆளுநர் தரப்பில், ‘சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த நோட்டீஸ் எங்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை.

இருந்தும் இவ்வழக்கு தொடர்பான சிறு குறிப்பு அறிக்கையை தயாரித்து வந்துள்ளோம்’ என்று கூறப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘நோட்டீஸ் ஏன் உங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பதை பதிவாளரிடம் அணுகி கேட்டுக் ெகாள்ளுங்கள்’ என்றார். தொடர்ந்து ஆளுநர் தரப்பு வழக்கறிஞரின் சிறு குறிப்பு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கேரள ஆளுநருக்கு எதிரான அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கில், வரும் வெள்ளிக்கிழமைக்குள் உள்துறை அமைச்சகம், ஆளுநர் தரப்பு பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. தமிழக அரசின் வாதத்தை தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கூறுகையில், ‘ஆளுநர் மூன்று ஆண்டாக மசோதாவை கிடப்பில் போட்டது ஏன்? தமிழ்நாடு ஆளுநர் என்ன ெசய்து கொண்டிருக்கிறார்? மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடும் அளவிற்கு ஆளுநர் அலட்சியமாக செயல்படுவதா? மாநில ஆளுநருக்கு மூன்று அதிகாரங்கள் உள்ளன.

அதாவது மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அல்லது நிராகரிப்பதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். அல்லது குடியரசு தலைவருக்கு மசோதவை அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் இந்த மூன்றையும் ஆளுநர் செய்யவில்லை. மீண்டும் நிறைவேற்றிய 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பும் அதிகாரத்தை ஆளுநர் இழந்துவிட்டார். நிறுத்தி வைக்கிறேன் என ஒரே ஒரு வாக்கியத்தை குறிப்பிட்டு 10 மசோதாக்களை திருப்பி அனுப்பியிருந்தார் ஆளுநர். காரணம் கூறாமல் திருப்பியனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியதால் ஆளுநர் ஒப்புதல் தந்தே ஆக வேண்டும். காரணத்தோடு மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பி இருந்தால் அவற்றை ஜனாதிபதிக்கு அனுப்ப வாய்ப்பு இருந்திருக்கும்.

தற்போது ஜனாதிபதிக்கு மசோதாக்களை அனுப்பும் உரிமையை ஆளுநர் இழந்துவிட்டதாக தலைமை நீதிபதி அதிரடி கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழக அரசு மீண்டும் நிறைவேற்றிய 10 மசோதாக்கள் தொடர்பாக மாநில ஆளுநர் எடுத்த நிலைபாடு என்ன? என்பவவை குறித்து ஒன்றிய அரசும், ஆளுநர் தரப்பும் விளக்கமளிக்க வேண்டும்’ எனக்கூறி வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related posts

வாக்கு எண்ணிக்கை நாளில் ரொம்ப உஷாராக இருங்க… முகவர்களுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்

101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு

ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸில் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு குறுகிய கால சான்றிதழ் படிப்பு: ஏ.ஐ.சி.டி.இ அறிமுகம்