மே மாதம் நடைபெற உள்ள பொது மாறுதல் கவுன்சலிங்கில் கலந்துகொள்ள ஆசிரியர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கவுன்சலிங் கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணைய தளம் மூலம் மே மாதம் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து, பொதுமாறுதல் கவுன்சலிங்கில் பங்கேற்க உள்ள ஆசிரியர்கள் இன்று முதல் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே ம ாதம் பொது மாறுதல் கவுன்சலிங்கை பள்ளிக் கல்வித்துறை நடத்தி, ஆசிரியர்கள் விரும்பும் இடங்களுக்கே மாறுதல் ஆணைகளை வழங்கி வருகிறது.

இதன்படி கடந்த 2021-2022ம் கல்வி ஆண்டிலும் பொது மாறுதல் வழங்கப்பட்டது. இதையடுத்து, 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல்களை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த கவுன்சலிங்கில் பங்கேற்று விருப்ப மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள் இன்று முதல் தங்கள் விண்ணப்பங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த கல்வி ஆண்டில் மாறுதல் கோரும் ஆசிரியர்கள் தற்போது பணியாற்றும் பள்ளியில் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை கடைபிடிக்கத் தேவையில்லை. மாறுதல் கோரும் விண்ணப்பத்தில் முன்னுரிமை கோரி விண்ணப்பிக்கும் போது அதற்கான உரிய அலுவலரால் அளிக்கப்பட்ட ஆதாரத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தற்போது பணியாற்றும் பள்ளிக்கு மாறுதல் பெற்று வந்த வகையை உரிய ஆதாரத்துடன் இணைக்க வேண்டும். ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களும் தலைமை ஆசிரியரின் ஒப்புதலுடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் இன்று முதல் மே 1ம் தேதி வரை பதிவேற்றலாம். மே 31ம் தேதி நிலவரப்படி அனைத்து வகையான ஆசிரியர்களின் நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரங்களை இம்மாறுதம் 30ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆசிரியர் இன்றி உபரிக் காலிப் பணியிடத்தை எக்காரணம் கொண்டும் காலிப்பணியிடமாக கருதக்கூடாது. பொதுமாறுதல் கவுன்சலிங் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும். பொது மாறுதல் விண்ணப்பங்கள் இன்று முதல் மே 1ம் தேதி பதிவேற்றம் செய்ய வேண்டும். முன்னுரிமைப் பட்டியல், காலிப்பணியிட விவரங்கள் மே 3ம் தேதி வெளியிடப்படும். முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் இருந்தால் மே 4ம் தேதி தெரிவிக்கலாம். மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல்கள் மே 5ம் தேதி வெளியிடப்படும்.

மே 8ம் தேதி மலைச் சுழற்சி மாறுதல் கவுன்சலிங் தொடங்கும். அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய்கோட்டத்துக்குள்)8ம் தேதி நடக்கும். நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்மாறுதல் கவுன்சலிங் 9ம் தேதி காலையில் நடக்கும். அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல்(மாவட்டம் விட்டு மாவட்டம்), கடந்த ஆண்டுகளில் பணி நிரவல் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை மீண்டும் தாய் ஒன்றியத்துக்கு மீள ஈர்த்தல் ஆகியவை மே 10ம் தேதி நடக்கும்.

அரசு மற்றும் நகராட்சி முதுநிலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் நிலை 1, உடற்கல்வி இயக்குநர் நிலை1, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாறுதல்(வருவாய் மாவட்டத்துக்குள்), கடந்த ஆண்டுகளில் பணி நிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீள தாய் ஒன்றியத்துக்கே ஈர்த்தல் ஆகியவை ேம 11ம் தேதி நடக்கும்.இதன்படி படிப்படியாக ஆசிரியர்கள் நிலையில் கவுன்சலிங் மே 31ம் தேதி வரை நடக்கும். இது தொடர்பான விவரங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறை அனுப்பிவைத்துள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் கோவை, மதுரை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு

பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு; மகளிர் ஆணையத்தில் குவியும் புகார்கள்: யூடியூபர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பூமியை தாக்கிய சூரிய புயல் சூரிய காந்தப்புயலின் தரவுகளை சேகரித்த இஸ்ரோ: விஞ்ஞானிகள் தகவல்