தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 28,000 கிலோ கஞ்சா பறிமுதல்; இந்த ஆண்டில் 14,000 கிலோ கஞ்சா இதுவரை பறிமுதல்: கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் பேச்சு

சென்னை: நடப்பாண்டு இதுவரை தமிழகத்தில் 14 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி வளாகங்களில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பெருகி வரும் கஞ்சா, குட்கா, ஹெராயின் போன்ற போதைப்பொருட்களை தடுப்பதற்கு தமிழக போலீசார் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

போதைபொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கும், போதைப்பொருள் கடத்தும் குற்றவாளிகளை கைது செய்வதற்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டி.ஜி.பி சைலேந்திரபாபு அதிரடி ஆபரேஷனை நடத்த உத்தரவிட்டார். அதற்கு “ஆபரேஷன் கஞ்சா வேட்டை” என்று பெயரிடப்பட்டது. இதன்பேரில் தமிழகம் முழுவதும் போலீசார் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கும், குற்றவாளிகளை கைது செய்வதிலும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் போதை ஒழிப்பு குறித்து, காவல் துறை சார்பில் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பேசினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 28 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டில் 14 ஆயிரம் கிலோ கஞ்சா இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக போதைப்பொருள் விற்பனை செய்த நபர்களிடம் இருந்து ரூ.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வியாபாரிகளின் 5 ஆயிரம் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என்று கூறினார். ரயில்களில் போதை பொருள் ஏற்றி வருவதை தடுக்க தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் தமிழகத்தில் போதையில்லா தமிழகம் சாத்தியமாகும் என்று தெரிவித்தார்.

Related posts

அவதூறு வழக்கில் ராகுல்காந்தி 7ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சீட் கொடுக்காததால் விரக்தி; நான் பாஜகவில் தான் இருக்கிறேன்: நடிகையான மாஜி எம்பி பேட்டி

இந்தியாவுக்கே சவால்விடும் முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகின்றார்: கி.வீரமணி பேச்சு