சென்னை: செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கத்தில் தனது தந்தையை வெட்டிக்கொன்றதால் 20 ஆண்டுகள் காத்திருந்து பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்து மகன் பழிதீர்த்து கொண்டது மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சென்னை கொடுங்கையூர் ஏவிபி.நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் செழியன் (59). முன்னாள் ரவுடியான இவருக்கு திருமணமாகவில்லை. சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ரவுடியாக வலம்வருவதை கைவிட்டு விட்டு திருந்தி வாழ்வதற்காக செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கத்தில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை செய்துள்ளார். வேலையை முடித்துவிட்டு நேற்றிரவு வடபெரும்பாக்கம் சாலையில் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது 2 பைக்குகளில் வந்த 5 பேர், செழியனை சுற்றி வளைத்து தாக்க முயன்றனர். விபரீதத்தை உணர்ந்துகொண்ட செழியன், அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடியுள்ளார். ஆனால் அந்த கும்பல் விடாமல் விரட்டிச் சென்று செழியனை சுற்றிவளைத்து பின்னர் சாலையில் தள்ளி சரமாரியாக வெட்டினர். இதில் ரத்தவெள்ளத்தில் செழியன் துடிப்பதை பார்த்ததும் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. இதையடுத்து பொதுமக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் போலீசார் விரைந்து வந்து சாலையில் துடித்துக்கொண்டிருந்த செழியனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுசம்பந்தமாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில், நள்ளிரவில் செழியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து செங்குன்றம் காவல் மாட்ட மாவட்ட துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் செங்குன்றம் காவல் உதவி ஆணையர் ராஜாராபர்ட் தலைமையில் கொலை வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதுசம்பந்தமாக தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இதில், கொலை செய்யப்பட்ட செழியன், கொடுங்கையூர் பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன், அவரது சகோதரர் பாபு ஆகியோருடன் சேர்ந்து கள்ள சாராயம் விற்றுள்ளார். இதில் செழியனுக்கும் பிரபாகரனுக்கும் தொழில் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக பிரபாகரன், அவரது சகோதரர் பாபு ஆகியோரை செழியன் அடுத்தடுத்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் கடந்த 2003ம் ஆண்டு தண்டனை பெற்று சிறைக்கு சென்ற செழியன் கடந்த 2018ம் ஆண்டு தண்டனை முடிந்து வெளியே வந்துள்ளார். இதனிடையே கொலை செய்யப்பட்ட பிரபாகரின் மகன் சதீஷ்குமார் (29) என்பவர் பெரவள்ளூரில் வாட்டர் கேன் சப்ளை செய்து வருகிறார். இவருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளது. எந்தவித வழக்கிலும் சிக்காமல் சதீஷ்குமார் வாழ்ந்து வந்துள்ளார். இருப்பினும் தந்தையை கொலை செய்த செழியனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பல ஆண்டுகளாக காத்திருந்துள்ளார்.
இந்த திட்டத்தின்படி நேற்று மாலை சதீஷ்குமார், பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த நண்பர்கள் 5 பேருடன் இரண்டு பைக்கில் வடபெரும்பாக்கம் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து கண்காணித்து செழியனை வந்தபோது அவரை சுற்றிவளைத்து வெட்டி கொலை செய்துள்ளனர். இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சதீஷ்குமார், அவரது நண்பர்களை பிடிக்க காவல் உதவி ஆணையர் ராஜாராபர்ட் தலைமையில் போலீசார் கொடுங்கையூர் பகுதிக்கு விரைந்தனர். போலீசார் தங்களை தேடுவதை அறிந்ததும் சதீஷ்குமார், அவரது கூட்டாளிகள் ஆகிய 5 பேர் செங்குன்றம் காவல் நிலையத்தில் இன்று சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். அவர்கள் வாக்குமூலத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.