வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் பெயரை குரங்கு சரவணன் என்று முதல் தகவல் அறிக்கையில் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. ஒருவரின் பெயரை மாற்றுவது அவர்களின் சொந்த விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர காவல்துறையால் மரியாதை குறைவான பெயர்கள் வைக்கக் கூடாது. எனவே, குரங்கு என்ற வார்த்தை நீக்கப்படுகிறது. பெயர் என்பது நம் அடையாளத்தின் முக்கிய பகுதியாகும். தனிப்பட்ட, கலாச்சார, குடும்ப தொடர்புகளை ஆழமாக எடுத்து செல்பவைதான் பெயர்கள்.
இதுபோன்ற பட்டப்பெயர்களை வைப்பது வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் மனித உரிமையை, அவர் நிரபராதி என்று கருதப்படுவதற்கான உரிமையை மீறும் வகையில் உள்ளது. இதுபோன்ற அடைமொழிகளை வைத்து அழைக்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும். அதற்கான உரிய அறிவுறித்தல்களை காவல்துறை உயர் அதிகாரிகள் வழங்க வேண்டும்.
இந்த வழ்கில், பொது அமைதிக்கு இடையூறு ஏற்பட்டதற்கான சாட்சிகள் இல்லை. ஒரு சென்டிமீட்டர் அளவு கூட இல்லாத மூன்று கற்களைப் பயன்படுத்திக் கூட்டத்தை சரவணன் அச்சுறுத்தினார் என்ற கதையை எல்.கே.ஜி, யு.கே.ஜி. குழந்தைகள் கூட நம்பாது. வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் நம்பகத்தன்மை அற்றவையாக உள்ளதால் சரவணனை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது என்று தீர்ப்பளித்தார்.