அன்றைய தினம் ஓபிஸ், இபிஎஸ் தரப்பினர் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதலில் ஓ.பி.எஸ் தரப்பினர் கட்சியின் ஆவணங்களை எடுத்துச் சென்றதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த கலவரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த பொருட்களைக் கேட்டு சி.வி சண்முகம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் கலவரம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், சி.வி. சண்முகத்தின் மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சி.வி. சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட அனைத்து ஆவணங்கள் மற்றும் பொருட்களையும் மனுதாரர் சி.வி சண்முகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.