மூட்டு வலி தடுக்கும் வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

யோகா மற்றும் நேச்ரோபதி மருத்துவர் என். ராதிகா

பொதுவாக, வயது முதிர்வு ஏற்படத் தொடங்கியதுமே பலரும் சந்திக்கும் பெரிய பிரச்னை மூட்டு வலி. இந்த மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று கூறுகிறார் யோகா மற்றும் நேச்ரோபதி மருத்துவர் என்.ராதிகா.மூட்டுகள் என்றாலே, கழுத்து முதல் தொடங்கி தோல்பட்டை, கை, இடுப்பு, கால், கணுக்கால் என எல்லா இடங்களில் மூட்டுகள் உண்டு. ஆனால், கால் மூட்டுகளில் ஏற்படும் வலியால்தான் நாம் அதிகமாக அவதிப்படுகிறோம். எதனால் இந்த மூட்டுவலி ஏற்படுகிறது என்றால், உடலுக்கு தேவையான குறிப்பாக எலும்புகளுக்கு தேவையான கால்சியம் குறையும்போது எலும்புகள் பலவீனமாகி, தேய்மானம் ஆக தொடங்குகிறது. இந்நிலையில்தான் மூட்டுகளில் வலி ஏற்படுகிறது. இதற்கு, மற்றொரு காரணம் என்னவென்றால், உடலில் வைட்டமின் டி சத்து குறையும்போதும் மூட்டுகளில் வலி ஏற்படுகிறது.

இதுதவிர, விளையாட்டுத்துறையில் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு மூட்டுவலி அதிகமாக இருக்கிறது. ஏனென்றால், இரண்டு மூட்டுகளையும் இணைக்க, லிக்மென்ட் என்ற ஜவ்வு இருக்கும். விளையாட்டு வீரர்கள் அதிகளவு உடலுக்கு உழைப்பு கொடுப்பதால், அந்த ஜவ்வு ஒரு கட்டத்தில் கிழிய தொடங்குவதினாலோ அல்லது விட்டுப்போவதினாலோ மூட்டுகளில் வலி ஏற்படுகிறது. இது தவிர, விபத்துகள் நேரிடும்போது, மூட்டுகள் பாதிக்கப்பட்டால் அதனால் வலி வருகிறது.

மற்றொன்று உடல் எடை அதிகரிக்கும்போது, அந்த எடையை பாதங்கள் தாங்க முடியாமல் மூட்டுகளில் அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது. ஆஸ்டோபோரிஸ் இது என்ன வென்றால் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் குறைவதனால் எலும்புகள் பலவீனம் அடைவதுதான் ஆஸ்டோபோரிஸ் என்று சொல்லப்படுகிறது. இது 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அதிகரித்து வருகிறது.

அடுத்து மெனோபாஸ். பொதுவாக, பெண்கள் 45-50 வயதை தொடும்போது, மாதவிடாய் சுழற்சி நிற்க தொடங்கும். இந்த நேரத்தில், பெண்களுக்கு கால்சியம் சத்து குறைய தொடங்கும். அதனால், அந்த வயதிலுள்ள பெண்கள் பலரும் மூட்டுவலியால் அவதிப்பட தொடங்குகின்றனர். இது மூட்டுவலியோடு போவதில்லை. கழுத்து, தோள்பட்டையில் வலி, இடுப்பு வலி போன்றவற்றையும் ஏற்படுத்துகிறது.

அதுபோன்று ரூமட்டாய்ட் ஆர்த்தரைட்டிஸ் இது எதனால், ஏற்படுகிறது என்றால், உடலில் உள்ள ஆர் ஏ பேக்டர் அளவுகள் அதிகரிக்கும்போது உடலில் உள்ள சின்னச்சின்ன மூட்டுகளிலிருந்து பெரிய மூட்டுகள் வரை அனைத்தையும் பாதிக்கும். உதாரணமாக, வீக்கம், வலி, மடக்க முடியாமல் கஷ்டப்படுவது போன்றவை இருக்கும். இவையெல்லாம்தான் பெரும்பாலான மூட்டுவலிகளுக்கு காரணங்களாக இருக்கக் கூடும்.

அறிகுறிகள் என்று பார்த்தால், உட்கார்ந்து எழும்போது வலி ஏற்படுவது. கீழே உட்கார்ந்து எழுந்திரிக்கும்போது வலிப்பது. கொஞ்சநேரம் காலை மடக்கி உட்கார்ந்து எழுந்தால் வலிப்பது. சிலருக்கு, படியேறும்போது கால் மூட்டுகளில் ஏதேனும் சத்தம் கேட்பது, வலியிருப்பது. சிலருக்கு மூட்டுகள் வீங்குவது. சிலருக்கு மூட்டுவலியுடன் தொடர்ந்து வேலைகள் செய்யும்போது, கால்கள் வளைந்துவிடுவது போன்றவை அறிகுறிகளாக இருக்கும்.

இந்நிலைக்கு எல்லாம் போகாமல், ஆரம்பத்திலேயே மூட்டுவலியை உணவுகள் மூலம் எப்படி சரி செய்து கொள்ளலாம் என்று பார்ப்போம். பொதுவாக, 13 வயதில் ஒரு பெண் குழந்தை, பூப்பெய்தும் பருவத்தில், சிகப்பரிசி, கேழ்வரகு புட்டு , எள் உருண்டை, கருப்பட்டி, நல்லெண்ணெய், உளுந்தகளி, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு போன்றவற்றை கொடுக்கத் தொடங்க வேண்டும். இதை தினமும் கொடுக்க முடியவில்லை என்றாலும், மாதவிடாய் நேரத்திலாவது, நான்கு நாள்களுக்கு தொடர்ந்து கொடுத்து வருவது நல்லது.

இதே வயதில்தான், ஆண்பிள்ளைகளும் அடுத்தக்கட்டத்தை நோக்கி வளர்ச்சி அடைய தொடங்குகிறார்கள். எனவே, அந்த வயதிலிருந்தே அவர்களுக்கும் இந்த உணவுளை எல்லாம் கொடுக்கத் தொடங்கினால், அவர்களும் உடலில் எந்த பிரச்னையும் இல்லாமல் ஆரோக்யமாக இருப்பார்கள். பெரும்பாலானவர்கள், மூட்டுவலி என்றதுமே வலி மாத்திரைகள் எடுத்துக் கொள்ள தொடங்குகிறார்கள். அப்படியில்லாமல், காலை எழுந்தவுடன், இஞ்சி, சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து கொதிக்க வைத்த நீரை காலை, மாலை இரு வேளை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அல்லது காலை டீ குடித்தால், மாலை வேளையில் காய்களுடன் இஞ்சி, சீரகம், மிளகு எல்லாம் சேர்த்து ஒரு சூப் மாதிரி செய்து குடித்து வரலாம். அடுத்து கேழ்வரகு சார்ந்த உணவுகள், களியாகவோ, முருங்கைக்கீரை சேர்த்து அடையாகவோ, புட்டாகவோ, கஞ்சியாகவோ, தோசையாகவோ செய்து காலை வேளையில் சாப்பிட்டு வரலாம்.

தோசைக்கு மாவு அரைக்கும்போது, சிகப்பரிசியும் சேர்த்து தோசை மாவு தயாரித்து அதில், இட்லியாகவோ, தோசையாகவோ செய்து சாப்பிட்டு வரலாம். சிகப்பரிசி அவல் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம்.அதுபோன்று எள்ளு சேர்த்த உணவுகள், கொள்ளு வேக வைத்து சுண்டலாக செய்து சாப்பிடுவது, அல்லது எள்ளு, கொள்ளு, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஒரு பொடியாக திரித்து வைத்துக் கொண்டு, சாதத்தில் போட்டு சாப்பிடுவது, இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடுவது போன்றவற்றை செய்யலாம்.

பச்சைபயறை முளைக்கட்டியோ, வேக வைத்தோ, கூட்டு வைத்தோ செய்து சாப்பிட்டு வரலாம்.வெந்தயம், சீரகம் , தனியா வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு , சாம்பார், கோதுமை தோசை, ராகி அடை செய்யும்போது சிறிது தூவி சாப்பிட்டு வரலாம். மிளகு அதிகளவில் சேர்த்துக் கொள்ளலாம். சாமை, வரகு, தினை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். பாதாம் ஊற வைத்து தோல் நீக்கிவிட்டு சாப்பிடுவது நல்லது.பால் சார்ந்த உணவுகளான மோர், தயிர் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

கால்சியம் மாத்திரைகள் கடையில் கிடைக்கிறதே அதை வாங்கி சாப்பிடலாமே என்று பலர் கேட்கிறார்கள். கால்சியம் மாத்திரைகள் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, ரத்தக்குழாய் திக்காவது அல்லது ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவது அல்லது குதிகாலில் கூடுதலாக எலும்பு வளர்வது போன்றவை ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. எனவே, முடிந்தளவு மாத்திரைகளை தவிர்த்துவிட்டு, உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது.

அதேபோன்று கால்சியம் சத்துடன் கண்டிப்பாக, வைட்டமின் டி சத்தும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் டி சத்து சூரிய ஒளியில் அதிகளவு இருக்கிறது. அது கிடைக்க, காலை 9 மணிக்குள் அல்லது மாலை 3-5க்குள் சிறிதுநேரம் வெயில்படும்படி 20 நிமிடம் நிற்பது நல்லது. இப்படி வெயிலில் நிற்பதற்கு முன்பு, சிறிதளவு தண்ணீர் குடித்துவிட்டு போய் நிற்பது மேலும் சிறந்தது. பச்சை காய்கறிகள், பிரண்டை, முடக்கற்றான் இவையெல்லாம் வாரத்திற்கு 2 நாள்கள் சேர்த்து வருவது மிகவும் நல்லது.

இது இரண்டும் முடக்குவாதத்திற்கு நல்ல நிவாரணம் தரும். முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை போன்றவற்றையும் அதிகம் சாப்பிட்டு வரலாம். இதைத் தொடர்ந்து எடுத்து வரும்போது, மேற்கொண்டு எலும்பு தேய்மானம் ஆவது தடுக்கப்படும். மூட்டுகளுக்கும் பலம் கிடைத்து வலி குறையும்.

Related posts

கோடையில் குளிர்ந்த நீர் அருந்தலாமா?

மசாலாக்களின் மறுபக்கம்…

சின்னம்மையும் ஆயுர்வேத தீர்வும்!