தஞ்சாவூர் : தஞ்சாவூரில் பழைய பஸ் நிலையம் அருகே மாநகராட்சி மூலம் கையகப்படுத்தப்பட்ட சுதர்சன சபா இருந்த இடம் இரு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. அது தொடர்பான பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகில் சுதர்சன சபா செயல்பட்டு வந்தது. இந்த சபா கடந்த 2022ம் ஆண்டு இடித்து அகற்றப்பட்டது. 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் இயங்கி வந்த இந்த சபாவில் நாடகம், கலை நிகழ்ச்சிகள், புத்தக கண்காட்சி, சொற்பொழிவுகள் போன்றவை நடத்தப்பட்டு வந்தது.
1927-ம் ஆண்டு இந்த சபா கட்டப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 40 ஆயிரத்து 793 சதுர அடி ஆகும். இந்த கட்டிடத்தில் அனுமதியின்றி கட்டிடம் கட்டி உள் வாடகைக்கு விடப்பட்டது. இதையடுத்து மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியும் செலுத்தவில்லை.இதுபோன்ற காரணத்தாலும் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றுதல் சட்டத்தின்படி அப்போது மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணகுமார், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார். இது தொடர்பாக நோட்டீசும் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றியதோடு, கட்டிடம் பழமையானதாக இருந்ததால் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது. அந்த இடத்தை மாநகராட்சி கையகப்படுத்தியது.
அந்த திடலில் கட்சி பொதுக்கூட்டங்கள், கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த வாடகை அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. அதன்படி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் இப்போது அந்த இடத்தை மாநகராட்சி வாகன நிறுத்துமிடமாக மாற்றி உள்ளது.
அதன்படி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடமாக மாற்றி டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த திடலை சுற்றிலும் இரும்பு தகரங்களை கொண்டு அடைத்து முகப்பு பகுதியில் இருவாசல்கள் விடப்பட்டுள்ளது.ஒரு வாசல் வழியாக வாகனம் உள்ளே செல்வதற்கும், மற்றொரு வாசல் வழியாக வாகனம் வெளியே செல்லும் வகையிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு மாநகராட்சி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் எனவும் பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.