இந்த ஒடிசா ரயில் விபத்து நாசவேலையாக இருக்கலாம் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பதை இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலசோர் அரசு ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி) நிலையத்தில் விபத்து தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக விசாரணையை தொடங்கியது சிபிஐ. 10 பேர் அடங்கிய குழு, விபத்து நடந்த பாஹாநாகா ரயில் நிலையத்தில் நேற்று ஆய்வு செய்தது.
ரயில் விபத்திற்கு மின்னணு இன்டர்லாக்கிங் பிரச்சனையே காரணம் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ள நிலையில், விபத்து நடந்தது எப்படி என்ற உண்மை காரணத்தை கண்டுபிடிக்கும் விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகு சிபிஐ அதிகாரிகள் 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்வார்கள் என கூறப்படுகிறது. இதனிடையே ஒடிசா ரயில் விபத்து காரணமாக உயிரிழந்த 275 பேரில், 101 பேர் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட வில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 55 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.