நாட்றம்பள்ளி அருகே சோகம் வலிப்பு நோய்க்கு தவறான சிகிச்சையால் பள்ளி மாணவன் சாவு

*போலி டாக்டர் அதிரடி கைது

வாணியம்பாடி : திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தோப்பளகுண்டா அடுத்த ஜடான்குட்டை பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி(45) விவசாயி. இவரது மகன் சூரியபிரகாஷ்(13). இவர் நாட்றம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சூரியபிரகாசுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரை மீட்டு அருகே நாயணசெருவு பகுதியில் உள்ள கிளினிக்குக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கிருந்த டாக்டர் கோபிநாத் என்பவர், சிறுவன் சூரியபிரகாசை பரிசோதித்து விட்டு, அவருக்கு ஊசி செலுத்தியுள்ளார். பின்னர், அவரை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளனர். சிறிது நேரத்தில் சூரியபிரகாசுக்கு அதிகமான காய்ச்சல் ஏற்பட்டு கடும் அவதிப்பட்டுள்ளார். எனவே, அவரை நாட்றம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் சூரியபிரகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த திம்மம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில், நாயணசெருவு பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வரும் திருப்பத்தூர் தில்லை நகரை சேர்ந்த கோபிநாத்(40) லேப் டெக்னீஷியன் முடித்துவிட்டு மருத்துவம் பார்த்து வருவதும், அவர் தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாக சிறுவன் இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலி டாக்டர் கோபிநாத்தை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலி டாக்டரின் தவறான சிகிச்சையால் பள்ளி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

சென்னை குரோம்பேட்டையில் வேன் டயர் வெடித்ததில் வாகனம் தடுப்பு சுவரில் மோதி விபத்து

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

உ.பி. மாநிலம் தேர்தல்; பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன்!