போபால்: மத்தியபிரதேசத்தில் 2023 பேரவை தேர்தலில் விஜய்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற ராம்நிவாஸ் ராவத் தற்போது பேரவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். 6 முறை பேரவை உறுப்பினராகவும், ஒரு முறை அமைச்சராகவும் பதவி வகித்த ராம்நிவாஸ் ராவத் கடந்த 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மொரேனா தொகுதியில் போட்டியிட்டு, பாஜ வேட்பாளர் நரேந்திர சிங் தோமரிடம் தோல்வி அடைந்தார்.
தற்போதைய தேர்தலில் ராம்நிவாஸ் ராவத்துக்கு பதிலாக மொரேனா தொகுதியில் சத்யபால் சிங் சிவார்கருக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது. இதனால் அதிருப்தியில் இருந்த ராம்நிவாஸ் ராவத் நேற்று முதல்வர் மோகன் யாதவ் முன்னிலையில் பாஜவில் தஞ்சமடைந்தார். அவருடன் காங்கிரசை சேர்ந்த மொரேனா மாவட்ட மேயர் ஷர்தா சோலங்கியும் பாஜவில் சேர்ந்தார்.