பின்னர் அங்கிருந்து 38 மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த சுகாதார நடைபாதையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: நடைபாதையில் அமரும் இருக்கைகள், செல்பி இடங்கள் என அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நடைபயணத்தில் எங்களை ஊக்கப்படுத்தி எங்களை போல உள்ள இளைஞர்களுக்கு ஊக்கமாக இருப்பவர் அமைச்சர் மா.சுப்பிரமணியன். இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்கள் இயக்கமாக மாற மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘‘நம் முதல்வர் உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வையும், உடற்பயிற்சி செய்வதால் வரும் நன்மைகள் குறித்தும் பல்வேறு செய்திகளை நாட்டுக்கு தெரிவித்து கொண்டிருக்கிறார். விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் இதுவரையில் 2 கோடி இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்கும், விளையாட்டில் பங்கேற்க ஊக்கமளிப்பதிலும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்று இளைஞர்களிடையே மாரடைப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. இதை தடுக்க ஒரே தீர்வு நடப்பதும், உடற்பயிற்சி செய்வதும் தான். நோய் வருவதற்கு முன் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது தான் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்’ என்றார்.