வழக்கறிஞரான இவர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் துணை தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார். அதுமட்டுமின்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக செய்தி தொடர்பாளராகவும் பொறுப்பில் உள்ளார். பல மூத்த தலைவர்கள் மயிலாடுதுறை தொகுதியை கைப்பற்ற போட்டியிட்ட நிலையில் காங்கிரஸ் மேலிடம் சுதாவை வேட்பாளராக்கியது குறிப்பிடத்தக்கது. தமிழக தலைமை சிலருக்கு வாய்ப்பளிக்க கூறிய போதும், மேலிட தலைவர்கள் மாற்று வேட்பாளர்கள் சிலரை முன்னிறுத்தியுள்ளனர். இந்த பிரச்னைகளில் ராகுல்காந்தி தலையிட்டு சமரசப்படுத்தியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைமை டெல்லி தலைவர்களிடம் வழங்கிய 3 பேர் கொண்ட பட்டியலில் வழக்கறிஞர் சுதா பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மேலிட செல்வாக்கு அவருக்கு முழுமையாக இருந்ததால் இந்த வாய்ப்பை அவர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவி, தங்களுக்கான கோட்டாவை கேட்டு கே.சி.வேணுகோபாலுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் மற்றும் மேலிட தலைவர்கள் அஜோய்குமார், ஸ்ரீவல்ல பிரசாத் உள்ளிட்டவர்கள் வழக்கறிஞர் சுதாவுக்கு பரிந்துரை செய்ததை தொடர்ந்து அவரது பெயர் ராகுல்காந்தியிடம் வழங்கப்பட்டது. பாதயாத்திரை தொடக்கம் முதல் ராகுலுடன் சுதா பயணித்து நல்ல பெயரை வாங்கியுள்ளார். இதனால் ராகுல்காந்தியும் உடனடியாக அவரது பெயரை டிக் செய்துள்ளார். இதனால் தான் இத்தனை மூத்த தலைவர்கள் முட்டி மோதியும் வழக்கறிஞர் சுதாவுக்கு சீட் வழங்கப்பட்டதாக காங்கிரசாரிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.