மதுரை: மதுரை மாநகராட்சியில் கால்நடை மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் உள்ளதாக மதுரை மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார். இதுவரை 39,000-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று மதுரை மாநகராட்சி தரப்பு தெரிவித்தது.