தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாமி கும்பிட்ட போது கோயிலில் ‘ட்ரோன்’ பறக்கவிட்ட நபர் கைது: மத்திய பிரதேச போலீஸ் நடவடிக்கை

உஜ்ஜைனி: மத்திய பிரதேசத்தில் உள்ள கோயிலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாமி கும்பிட்ட போது, மர்ம ட்ரோனை பறக்கவிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல், கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலுக்கு இரவு நேரத்தில் சென்றார். அப்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அன்றிரவு கோயில் பகுதியில் ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஒன்று பறந்தது. கோயில் வளாகத்தை சுற்றிலும் பறந்த இந்த ட்ரோனை பார்த்ததும் உளவுப் பிரிவு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, அந்த ட்ரோனை பறக்கவிட்ட நபர் குறித்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் ஆனந்த் கூறுகையில், ‘ட்ரோனை பறக்கவிட்ட நபர், உத்தரபிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஆவார். அவர் மீது ஐபிசியின் 188-ன் பிரிவை மீறியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. ட்ரோன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதனையும் மீறி அந்த நபர் ட்ரோனை பறக்கவிட்டதால் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

Related posts

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை

கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு