கன்னியாகுமரி: சித்ரா பவுர்ணமியன்று மாலை கன்னியாகுமரி சன்செட் பாயின்ட் பகுதியில் சூரியன் மறையும் காட்சியையும், முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கம பகுதியில் சந்திரன் உதயமாகும் காட்சியையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும். இந்த அபூர்வ காட்சியில் மேற்கே அரபிக்கடல் பகுதியில் வர்ண ஜாலத்துடன் சூரியன் மஞ்சள் நிறத்தில் வட்ட வடிவத்தில் கடலில் மறையும். அப்போது கிழக்கு பக்க வங்கக்கடல் பகுதியில் கடலும் வானமும் சந்திக்கும் இடத்துக்கு மேல் பகுதியில் சந்திரன் வெண் ஒளி பந்து போன்ற வடிவத்தில் எழும். இந்நிலையில் சித்ரா பவுர்ணமியான நேற்று மேகமூட்டம் காரணமாக இக்காட்சியை ஒரே நேரத்தில் காண முடியவில்லை. இதனால் சூரியன் மறையும் காட்சியை காணவும் முக்கடல் சங்கமம் கடற்கரையில் சந்திரன் உதயமாகும் காட்சியை காணவும் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.