கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்

ஊட்டி : ஊட்டி அருகே கொல்லிமலை பகுதியில் இருந்து காந்திபேட்டை வரை புறவழி சாலை அமைப்பதற்கான விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தை பிற மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய சாலையாக கூடலூரில் இருந்து ஊட்டி, குன்னூர் வழியாக மேட்டுபாளையம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதுதவிர ஊட்டியில் இருந்து கோத்தகிரி மார்கமாக சாலை உள்ளது.

இதனிடையே இச்சாலைகளில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை சரி செய்யும் நோக்கில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மேட்டுப்பாளையத்தில் இருந்து பர்லியார் வழியாக ஊட்டி, கூடலூருக்கு பயணிப்போர் நெரிசலின்றி செல்ல வசதியாக குன்னூருக்கு 3 கிமீ.க்கு முன்பாக காட்டேரி பகுதியில் இருந்து குந்தா சாலையில் சேலாஸ், கெந்தளா, கேத்தி பாலாடா, கொல்லிமலை, காந்திபேட்டை, லவ்டேல் வழியாக ரூ.46 கோடி மதிப்பில் புறவழி சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக மழைநீர் வழிந்தோட வசதியாக பல்வேறு இடங்களில் நிலத்தடி கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு விரிவாக்க பணிகள் மேற்கொண்டு பக்கவாட்டு தடுப்புசுவர் அமைக்கப்பட்டது. தொடர்ந்து சேலாஸ், கெந்தளா வரைசாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இச்சாலையில் தார் ஊற்றி செப்பனிடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் காந்திபேட்டை முதல் லவ்டேல் காவல் நிலையம் வரை மரங்கள் அகற்றப்பட்டு சாலை சுமார் 3 கிமீ தூரத்திற்கு சுமார் 20க்கும் மேற்பட்ட நிலத்தடி கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு தார் சாலையாக செப்பனிடப்பட்டது. இதனிடையே தற்போது கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை சுமார் 2 கிமீ தூரத்திற்கு குறுகலாக உள்ள சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வளைவுகளில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் நிறைவடைந்தவுடன் சாலை செப்பனிடப்படும். இச்சாலை பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் சீசன் சமயங்களில் கூடலூர் செல்ல கூடிய வாகனங்கள் இச்சாலை வழியாக திருப்பி விடப்படும். இதன் மூலம் ஊட்டி-குன்னூர் இடையே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வெகுவாக குறையும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை விசாரணை

சென்னையில் இருந்து நெல்லை வந்த அரசு விரைவுப் பேருந்தில் துப்பாக்கி பறிமுதல்

ஐகோர்ட் தீர்ப்பின்படி நிலுவையில் உள்ள கோரிக்கைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிசீலிக்க உத்தரவு