சென்னை: கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழ்நாட்டில் நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. பிரசாரத்திற்கு நாளை ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில், பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி விராசாமியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். கொளத்தூர் ஜி.கே.எம்.காலனியில் திறந்தவெளி வாகனத்தில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
வழிநெடுகிலும் முகமலர்ச்சியோடு கையசைத்து முதலமைச்சருக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். புதுமைப்பெண் திட்டத்தால் பயனடைந்து வரும் மாணவிகள் முதலமைச்சரிடம் நேரில் நன்றி தெரிவித்தார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சுட்டிக்காட்டி இல்லத்தரசிகளும் முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். முதல்வரின் சீதனம் ரூ.1000க்கு நன்றி என இல்லத்தரசிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கொளத்தூரில் வீதி, வீதியாகச் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்வரிடம் தன் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கோரிய பெண்ணின் குழந்தைக்கு மரகதம் என பெயர் சூட்டினார். நடனக் கலைஞர்கள், சிறுமியரின் நடன நிகழ்ச்சிகள், மேளதாளம் என கொளத்தூர் விழாக்கோலம் பூண்டது.