கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்காக 4 பேர் கோயம்புத்தூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர். கோடநாடு கொலை, கொள்ளை என்பது தமிழ்நாட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிகழ்வாகும். குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறையும் வரை அந்த பகுதியில் பகலில் கூட அவ்வளவு எளிதாக யாரும் நடமாட முடியாது. அப்படிப்பட்ட இடத்தில் தான் அவர் மறைவுக்கு பின்பாக கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை துரிதமாக நடைபெற்று வருகிறது.
ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கமாக ஒவ்வொரு நபரிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெறும். ஆனால் இந்த முறை கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், சம்மன் அனுப்பப்பட்டிருந்த 4 பேரும் கோயம்புத்தூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர்.
குறிப்பாக கோடநாடு எஸ்டேட்டில் ஓட்டுநராக தற்போதும் பணியாற்றி வரக்கூடிய ரமேஷ், ஜெயலலிதா இருக்கும் வரை கோடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு காய்கறி விநியோகம் செய்து வந்த தேவன், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயானின் நண்பரின் நண்பர் ரவிக்குமார் மற்றும் நம்பர் பிளேட் தயாரிக்கும் பணி செய்து வரும் கோவையைச் சேர்ந்த அப்துல் காதர் உள்ளிட்ட 4 பேர் முருகவேல் தலைமையிலான தனிப்படை முன்பாக ஆஜராகியுள்ளனர். கோவை பி.ஆர்.எஸ். வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் 4 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.