பணகுடி : தெற்கு வள்ளியூர் பைபாஸ் ரோட்டில் விதிமுறைகளை மீறி அதிக அளவில் கனிமவளங்கள் ஏற்றி வந்த லாரிகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
நெல்லை, தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கனிமவளங்கள் தொடர்ந்து கடத்தப்படுவதாக போலீசாருக்கும் வருவாய்த்துறையினருக்கும் புகார்கள் அதிகம் வருகின்றன. இதையடுத்து செங்கோட்டை புளியரை வழியாக கேரளாவிற்கு 10 டயர்களுக்கு மேற்பட்ட டாரஸ் லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கனிமவளங்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் நெல்லை, வள்ளியூர் நாகர்கோவில் வழியாக கேரளா சென்று வருகின்றன. இதையடுத்து இந்த வழித்தடத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று பணகுடி அருகே தெற்கு வள்ளியூரில் விதிமுறைகளை மீறி கேரளாவிற்கு கனிமவளங்கள் தனியார் டாரஸ் லாரிகள் மூலம் கடத்திச் செல்லப்படுவதாக ராதாபுரம் தாசில்தார் வள்ளிநாயகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அவரது தலைமையில் வருவாய்த்துறையினர் தெற்கு வள்ளியூர் பைபாஸ் ரோட்டில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த 11 டாரஸ் லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அரசால் அனுமதிக்கப்பட்ட எடையை விட விதிமுறைகளை மீறி அதிக அளவில் கனிம வளங்களை கேரளாவிற்கு ஏற்றிச் செல்வது உறுதியானது. இதையடுத்து 11 லாரிகளையும் தாசில்தார் பறிமுதல் செய்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த பணகுடி போலீசார், லாரி டிரைவர்களை கைது செய்தனர்.