உங்களுக்கு சொல்ல ஒரு நல்ல செய்தி கொண்டு வருகிறேன்.: கலைஞருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!

சென்னை : மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், திமுக கட்சியின் முன்னாள் தலைவருமான கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மற்றும் திருவாரூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதனிடையே திமுக தலைவரும் , தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கட்சியினர் சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

வங்கக் கடலோரம் வாஞ்சை மிகு தென்றலின் தாலாட்டில்
தமிழ்த்தாயின் தலைமகன்
பேரறிஞர் அண்ணாவுக்குப் பக்கத்தில்
கனிந்த இதயத்தோடு ஓய்வெடுக்கும் தலைவர் கலைஞரே!
நூற்றாண்டு விழா நாயகரே!
தந்தையே!
உங்களைக் காண ஆகஸ்ட் 7
அதிகாலையில் அணி வகுத்து வருகிறோம்!

உங்களுக்குச் சொல்ல ஒரு நல்ல செய்தி கொண்டு வருகிறேன்…
‘உங்கள் கனவுகளை எல்லாம்
நிறைவேற்றி வருகிறோம் தலைவரே!” –
என்பதுதான் அந்த நல்ல செய்தி!

நீங்கள் இருந்து செய்யவேண்டியதைத் தான்
நான் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.

‘பாதிச் சரித்திரத்தை நான் எழுதிவிட்டேன்;
மீதியை என் தம்பி கருணாநிதி எழுதுவான்’ என்றார்
காலம் வழங்கிய
இரண்டாவது வள்ளுவன் எம் அண்ணா.
95 வயது வரை நாளெல்லாம் உழைத்தீர்கள்.
இனம் – மொழி – நாடு காக்க
ஓய்வெடுக்காமல் உழைத்தீர்கள்.
உங்கள் உழைப்பின் உருவக வடிவம் தான்
இந்த நவீனத் தமிழ்நாடு.

நீங்கள் உருவாக்கிய நவீனத் தமிழ்நாட்டை
இடையில் புகுந்த
கொத்தடிமைக் கூட்டம் சிதைத்ததன் விளைவாக-
தாழ்வுற்றது தமிழ்நாடு.
தாழ்வுற்ற தமிழ்நாட்டை மீட்டெடுத்து
மீண்டும் உங்கள் ஆட்சி காலத் தமிழ்நாடாக
உருவாக்கி வளர்த்தெடுக்க
எந்நாளும் உழைத்து வருகிறேன்.

” ஸ்டாலின் என்றால் உழைப்பு … உழைப்பு… உழைப்பு” என்றீர்கள்.
அந்தக் கரகரக் குரல் தான்,
கண்டிப்புக் குரலாக என்னை உழைக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

”எனக்குப் பின்னால்,
இனமானப் பேராசிரியருக்குப் பின்னால்
யாரென்று கேட்டால்
இங்கே அமர்ந்திருக்கும் ஸ்டாலின்” என்று
எந்த நம்பிக்கை வைத்துச் சொன்னீர்களோ
அந்த நம்பிக்கையைக் காக்கவே உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

எட்டுக் கோடித் தமிழ் மக்களும் ஏதாவது
ஒருவகையில் பயனடையும் திட்டத்தைத் தீட்டி
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை
தித்திக்கும் மக்களாட்சி மாண்போடு நடத்தி வருகிறோம்.

ஒற்றைக் கையெழுத்துப் போட்டால்
அது கோடிக்கணக்கானவர்களை
மகிழ்விக்கிறது.
ஒரே ஒரு உத்தரவு
இலட்சக்கணக்கானவர்களை இரட்சிக்கிறது.
தமிழ்நாடு தலைநிமிர்கிறது.
இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக உயர்கிறது.
உங்கள் கனவுகள் நிறைவேறும் காலமாக ஆகிவிட்டது,
தலைவரே!

நீங்கள் இருந்து செய்யவேண்டியதைத் தான்
நான் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.

இதற்கு இடையில் –
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்
எங்களை எதிர்நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

வழக்கமாய்
ஐந்தாண்டுக்கு ஒரு முறை வரும் தேர்தல் அல்ல இது.
இந்தக் கட்சி ஆட்சியா?
அந்தக் கட்சி ஆட்சியா?- என்பதற்கான விடையல்ல
இந்தத் தேர்தல்.
இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா?
இருக்க முடியாதா? – என்பதற்கான தேர்தல் இது.

நீங்கள் சொல்வீர்களே-
‘தமிழ்நாட்டில் கால் பதித்து நின்று
இந்தியாவுக்காகக் குரல் எழுப்ப வேண்டும்’ – என்று!
அப்படித் தான் INDIA-வுக்கான குரலை எழுப்பத் தொடங்கி இருக்கிறோம்!

அனைத்துக்கும் தொடக்கம் தமிழ்நாடு.
INDIA-வுக்கான பாதை அமைத்ததும் தமிழ்நாடு.
இது இந்தியா முழுமைக்கும் பரவி விட்டது.

சுயமரியாதை-
சமூகநீதி-
சமதர்மம் –
மொழி,இன உரிமை –
மாநில சுயாட்சி –
கூட்டாட்சி இந்தியா – என்ற உங்களது விரிந்த கனவுகளை
இந்தியா முழுமைக்கும் அகலமாக விரித்துள்ளோம்.

திமுக மாநிலக் கட்சி தான்!
அனைத்து மாநிலங்களுக்கும்
உரிமையைப் பெற்றுத் தரும் கட்சியாக
இருக்க வேண்டும் என்ற
உங்களது அந்தக் கனவும் நிறைவேறப் போகும் காலம்..
வரும் காலம்!

உங்கள் நூற்றாண்டு-
உங்களது கனவுகளை நிறைவேற்றித் தரும் ஆண்டு.

நீங்கள் உருவாக்கிய
நவீனத் தமிழ்நாட்டை
நீங்களே ஆள்கிறீர்கள்.
நீங்களே வாழ்கிறீர்கள்.
நீங்களே வழிநடத்துகிறீர்கள்.
உங்கள் வழி நடக்கும்
எங்கள் வெற்றிக்கு வாழ்த்துங்கள்!
வென்று வந்து காலடியில் அதனை வைக்கின்றோம் தலைவரே!

என முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுகவை தொடர்ந்து தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு