மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்களை விட, உள்நாட்டு வீரர்கள் அதிகம் அதிரடி காட்டுகின்றனர். அவர்களில் ஒருவர் கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்(25). இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 337ரன் குவித்துள்ளார். அதிலும் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் 31ரன் தேவைப்பட்ட நிலையில், கடைசி 5 பந்துகளையும் சிகசர்களுக்கு பறக்க விட்டு, வெற்றியை வசப்படுத்தினார். அதனால் கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டுகளை மட்டுமல்ல, முன்னாள் வீரர்களின் பாராட்டுகளையும் ரிங்கு சிங் பெற்று வருகிறார். கூடவே அவரது ஆட்டம் தொடர்ந்து கவனிப்பை பெற்று வருகிறது. இந்நிலையில் முன்னாள் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங், ‘ரிங்கு உத்வேகத்துடன் விளையாடும் வீரர். அவர் எல்லா கடினமான தளங்களிலும் கடந்து இன்று இந்த இடத்துக்கு வந்துள்ளார். அதற்காக மிகவும் கடினமாக உழைத்துள்ளார். ரிங்குவின் தன்னம்பிக்கையும், அவரது பயணமும் சிறந்த வாழ்க்கைப் பாடம். வளரும் வீரர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அந்த கடின உழைப்பின் காரணமாக அவர், இந்திய அணியில் இடம் பெறும் காலம் தொலைவில் இல்லை’ என்று கூறியுள்ளார்.