புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கடைகளிலிருந்து 25 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆலங்குடியில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். இந்த சந்தையில், அழுகிய மீன்கள், பதப்படுத்தி சாப்பிடலாயக்கற்ற மீன்கள் விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலருக்கு புகார்கள் வந்தது .
இதைத்தொடர்ந்து, திருவரங்குளம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்கசாமி, அறந்தாங்கி நகர் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் ஆகியோர் சந்தையில் உள்ள மீன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கெட்டுப்போன 25 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர். மேலும், கெட்டுப்போன மீன் விற்கப்படுவதாக கூறப்பட்ட புகாரின் பேரில் கடைகளுக்கு சீல்வைக்கப்பட்டது.