சென்னை: ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படம் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. “திருவள்ளுவர் திருநாள் விழா” என்ற பெயரில் ஆளுநர் மாளிகை அழைப்பிதழ் வெளியிட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவித்த நிலையில், ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ்குமார் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை இடம் பெற்றுள்ளது. திருவள்ளுவர் படத்தை மீண்டும் காவி நிறத்தில் வெளியிட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்துள்ளது. காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்தை ஆளுநர் மாளிகை வெளியிட்டதை கண்டித்து தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.