காதலியுடன் புத்தாண்டு கொண்டாட செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் கைது

வேளச்சேரி: காதலியுடன் புத்தாண்டு கொண்டாடுவதற்காக செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை கைது செய்தனர். சென்னை வேளச்சேரி, கங்கை நகர், முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சௌந்தர்யா(23). இவர் வேளச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றுகிறார். இவர் கடந்த 29ம் தேதி மாலை 6 மணியளவில் பெண் தோழியுடன் வேளச்சேரி புதிய மேம்பாலம் வழியாக நடந்துசென்றபோது பைக்கில் வந்த மர்ம நபர் அவர் அணிந்திருந்த 9 கிராம் தங்கச் சங்கிலியை பறித்து தப்பினார்.

இதுகுறித்து சௌந்தர்யா கொடுத்த புகாரின்படி, வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஒரு வாலிபர் பைக்கில் பின்தொடரந்து சென்று செயினை பறித்து செல்வது பதிவாகியிருந்தது. ஆனால் அந்த பைக்கில் பதிவு எண் இல்லை. இதனால் முக அடையாளத்தை வைத்து வேளச்சேரி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரை கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்தபோது:
’புத்தாண்டு அன்று காதலியுடன் ஜாலியாக செல்ல திட்டமிட்டு அதற்கு பணம் தேவைப்பட்டதால் செயின் பறிப்பில் ஈடுபட்டேன். வழிப்பறி செய்வதற்காக தனது அண்ணனின் பைக் நம்பர் பிளேட்டுகளை கழட்டி வைத்துவிட்டு சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டேன். வழிப்பறி செய்த செயினை வேளச்சேரியில் உள்ள பிரபல நகைக்கடையில் விற்பனை செய்ய முயற்சி செய்தேன். ஆனால் நகைக்கான பில் இல்லை என்றதால் அந்த நகையை வாங்க மறுத்துவிட்டனர்.

இதனால் அந்த செயினை வேறொரு நகைக்கடையில் கொடுத்து உருக்கி உருண்டையாக மாற்றி பீரோவில் வைத்திருந்தேன்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் உருக்கிவைத்திருந்த தங்க நகையை பறிமுதல் செய்தனர். செயின் பறிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பைக்கை பறிமுதல் செய்தனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்