இந்தூர்: பருவ வயதை நெருங்கும் பெண் குழந்தை தாயின் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என இந்தூர் குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்ற ஒரு தம்பதியின் 10 வயது பெண் குழந்தை தனது தந்தையிடம் வளர்ந்து வந்தது. அந்த குழந்தையின் தாயார் ஒரு குற்ற வழக்கில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது பருவ வயதை நெருங்கும் பெண் குழந்தையை தன் பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டும் என காவலில் உள்ள பெண் குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த இந்தூர் குடும்பநல நீதிமன்றம், “சிறுமி பருவ வயதை நெருங்குவதால் தாயின் பாதுகாப்பில் இருப்பது தான் அந்த குழந்தைக்கு நல்லது. அப்போது தான் அதன் உணர்வுகளை, தேவைகளை சரியாக புரிந்து கொண்டு நிறைவேற்ற முடியும். ஆனால் சிறுமியின் தந்தை வாரஇறுதி நாட்களிலும், பண்டிகை சிறப்பு விடுமுறையிலும், கோடை விடுமுறை நாட்களிலும் தாயின் அனுமதி பெற்று சிறுமியை சந்திக்கலாம்” என்று தீர்ப்பு வழங்கினார்.