கஞ்சா வாங்கி தருவதாக ரூ50 ஆயிரம் ஏமாற்றியவரின் நண்பரை கடத்தி சித்ரவதை: 6 பேர் கைது


அண்ணாநகர்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சிலம்பரசன் (25), கடந்த சில நாட்களுக்கு முன், சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள அத்தை வீட்டிற்கு வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன், இவர் சாலையில் நின்றிருந்தபோது, 4 பைக்குகளில் வந்த 10 பேர் இவரை தாக்கி, கத்தி முனையில் கடத்தி சென்றனர். இதை பார்த்த பொதுமக்கள் நொளம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், சிலம்பரசனின் செல்போன் சிக்னலை சோதனை செய்தபோது, அம்பத்தூர் பகுதியில் இருப்பது தெரிந்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு சென்றபோது, ஒரு அறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் சிலம்பரசன் இருந்தார்.

அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மதுரவாயல் பகுதியில் பதுங்கி இருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த 6 பேரை சுற்றி வளைத்தனர். இதில், தப்பி ஓட முயன்றபோது தவறி விழுந்த 2 பேரின் கை எலும்பு முறிந்தது. அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், மதுரவாயல் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகளான ஜெய்கணேஷ் (24), கவுதம் (22), வருண் (19), ராஜேஷ் (20), ஐயப்பன் (22) மற்றும் 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. கைதான ஜெய்கணேஷ் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: முகப்பேர் பகுதியை சேர்ந்த பூவரசன் என்பவரிடம் கஞ்சா வாங்கி தருமாறு ரூ50,000 கொடுத்தேன்.

ஆனால் அவர் பணத்தை பெற்று, ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடினோம். எங்கும் கிடைக்கவில்லை. இதனால், பூவரசனை வரவழைப்பதற்காக அவரது நெருங்கிய நண்பரான சிலம்பரசனை கடத்தி தாக்கினோம். என தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.

Related posts

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாகிறது: பலத்த மழைக்கு வாய்ப்பு

சிசுவின் பாலினம் குறித்த வீடியோவை யூடியூபிலிருந்து நீக்கிவிட்டதாக யூடியூபர் இர்ஃபான் விளக்கம்!

விமானம் நடுவானில் மேகக் கூட்டத்தில் உரசியதால் ஏற்பட்ட விபத்து பற்றி பரபரப்பு தகவல்!