புதுடெல்லி: பாகிஸ்தானை சேர்ந்த ஜைன் என்பவரால் ‘கஜ்வா-இ-ஹிந்த்’ என்ற வாட்ஸ்அப் குழு பல்வேறு நாடுகளில் பயங்கரவாத செயல்களை மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்டது. இந்த குழுவில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஏமன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழுவின் அட்மினாக செயல்பட்டு வந்த பீகார் தலைநகர் பாட்னாவின் புல்வாரிஷரிப் பகுதியை சேர்ந்த தாஹிர் என்ற மர்கூப் அகமது டேனிஷ் கடந்த ஆண்டு ஜூலை 14ம் தேதி பீகார் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கில் 3 மாநிலங்களில் உள்ள சந்தேக நபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை நேற்று அதிரடி சோதனை நடத்தியது. பீகார், குஜராத், உத்தரபிரதேசத்தில் உள்ள சந்தேக நபர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் செல்போன்கள், மெமரி கார்டுகள், சிம் கார்டுகள், ஆவணங்கள்(டிஜிட்டல்) உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.