திண்டுக்கல்: போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்த சார்பதிவாளர் உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே எம்.வாடிப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜன் (48). விவசாயி. இவர், தனது விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் அபகரிக்க முயற்சிப்பதாக மாவட்ட எஸ்பி பிரதீப்பிடம் புகார் மனு அளித்தார். இப்புகாரின்பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். இதுகுறித்து குற்றப்பிரிவு எஸ்ஐ செல்வராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தங்கராஜனுக்கு சொந்தமான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அய்யம்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வேறு ஒருவருக்கு விற்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சார்பதிவாளர் பாலமுருகன் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.