நிதி நிறுவனங்கள், அடகு கடைகள் போன்றவை ரூ.20,000 மேல் ரொக்கமாக கடன் தரக்கூடாது: ரிசர்வ் வங்கி உத்தரவால் அதிர்ச்சி

புதுடெல்லி: நிதி நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ரூ.20,000-க்கும் மேல் கடனை பணமாக வழங்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில நாள்களாக வங்கித் துறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. அந்த வகையில் வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு (என்பிஎப்சி) புதிய சுற்றறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ‘வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 269 எஸ்எஸ் விதியின்படி, ஒரு நபர் 20,000 ரூபாய்க்கும் மேல் கடனை பணமாக பெற முடியாது.

அதனால், வாடிக்கையாளர்களுக்கு ரூ.20,000-க்கு மேல் கடன் தொகையை ரொக்கமாக வழங்கக் கூடாது. மேலும், ரொக்க பரிமாற்ற முறையில் வருமான வரித்துறையின் உத்தரவுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்’ என்று வங்கியில்லா நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நகைக் கடன், வணிகக் கடன் உள்ளிட்டவை வழங்கும் ஐஐஎப்எல் நிதி நிறுவனம், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியும், வெளிப்படைத்தன்மை இல்லாமலும் கடன் வழங்குவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அந்த நிறுவனம் நகைக் கடன் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அனைத்து வங்கியில்லா நிதி நிறுவனங்களுக்கும் ரிசர்வ் வங்கி தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய உத்தரவால், நடுத்தர மக்கள் தங்களிடம் இருக்கும் நகைகளை நிதி நிறுவனங்களில் அல்லது அடகு கடைகளில் வைத்து எளிதாக கடன் பெறமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நகைக் கடனாக ரூ.20,000-க்கும் மேல் தேவைப்படுபவர்கள் தங்களின் வங்கிக் கணக்கின் மூலம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு 4ஆக உயர்வு!!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை!!