தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தேர்தலின் போது வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெளியூர்களில் இருந்து வந்து தங்கி பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக சிறப்பு அரசு பேருந்துகள், ரயில்கள், ஆம்னி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போக்குவரத்து துறையின் சார்பில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (17/04/2024) நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும். பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில் 2092 பேருந்துகளும் பயணிகளின் தேவைக்கேற்ப 807 சிறப்புப் பேருந்துகளும் ஆக மொத்தம் 2899 இயக்கப்பட்டன.
இப்பேருந்துகளின் வாயிலாக சுமார் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் இதுவரையில் நேற்று (17.4.24) மற்றும் இன்று (18.4.24) ஆகிய நாள்களில் 46,503 பயணிகள் சென்னையிலிருந்து பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.