வாகன சோதனையின் மூலம் சிக்கினர் ₹5 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பதுக்கிய 2 கடைக்காரர்கள் கைது

*20 மூட்டைகள் பறிமுதல்

ஆரணி : ₹5 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்களை பதுக்கிய 2 கடைகாரர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 20 போதைப்பொருட்கள் அடங்கிய மூட்டைகளை பறிமுதல் செய்தனர். ஆரணி சுற்றுவட்டார பகுதியில் போதைப்பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக எஸ்பி கார்த்திகேயனுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், எஸ்பி உத்தரவின்பேரில் ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் எஸ்ஐ அருண்குமார், எஸ்எஸ்ஐக்கள் கன்ராயன், வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று காலை ஆரணி அடுத்த துந்தரிகம்பட்டு கூட்ரோடு ஆரணி- சேத்துப்பட்டு சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது, சந்தேகப்படும்படி வந்த ஒரு மொபட்டை தடுத்து நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் மொபட்டில் வந்த வாலிபர் தப்பியோட முயன்றனர்.

இதையறிந்த போலீசார் வாலிபரை மடக்கி பிடித்து அவர் கொண்டு வந்த ஒரு மூட்டைகளை சோதனை செய்ததில், குட்கா, ஆன்ஸ் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் மருசூர் ஊராட்சியில் உள்ள பூசனிபடிதாங்கள் கிராமத்தை சேர்ந்த குமார் (37) என்பதும், இவர் நெசல் கூட்ரோட்டில் கூல்ட்ரிங்ஸ் கடை வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவரின் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அதில், வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த 5 மூட்டை போதை பொருட்கள பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் குமாருக்கு, ஆரணி டவுன் காந்தி சாலையில் பிளாஸ்டிக் பொருட்கள் கடை வைதிருக்கும், ஆரணி மோகனன் தெருவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தேவாரம்(26) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் அவரை பிடித்து, புதுக்காமூர்சாலை புத்திரகா மேட்டீஸ்வரர் கோயில் அருகில் சிதிலமடைந்த அங்கன்வாடி கட்டிடத்தில் பதுக்கி வைத்திருந்த 14 மூட்டை போதைபொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும், இருவரும் பதுக்கி வைத்திருந்த 20 மூட்ைட போதைப்பொருட்களை பறிமுதல் செய்து, இருவரையும் ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ₹5 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

Related posts

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்