குடித்துவிட்டு தினமும் டார்ச்சர்; கோடாலியால் அடித்து மகனை கொன்ற தாய்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே மகனை கோடாலியால் அடித்துக் கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள முண்டக்கயம் பகுதியை சேர்ந்தவர் சாவித்திரி (68). அவரது மகன் அனு தேவன் (45). கூலித் தொழில் செய்து வந்தார். இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தாயை அடித்து உதைப்பது வழக்கம். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு அனு தேவனை தலையில் பலத்த காயத்துடன் சாவித்திரி கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக டாக்டரிடம் கூறினார். சிகிச்சை பலனின்றி அனு தேவன் இறந்தார். இந்தநிலையில் அவரது சாவில் மர்மம் இருப்பதாக முண்டக்கயம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அனு தேவனை தாய் சாவித்திரி கோடாலியால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரித்தபோது மகனை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தினமும் குடித்துவிட்டு துன்புறுத்தி வந்ததால் மகனை கொலை செய்ததாக அவர் போலீசிடம் வாக்குமூலம் அளித்தார். விசாரணைக்குப் பின் சாவித்திரியை போலீசார் கைது செய்தனர்.

Related posts

ஒவ்வொரு இவிஎம்-ல் பதிவான வாக்குகள் எண்ணி முடித்த பிறகு அனைத்து முகவர்களும் சரிபார்த்த பிறகே அடுத்த இயந்திரத்தை எண்ண வேண்டும் : தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது: வரும் 21ம் தேதி விண்ணப்பிக்கலாம்

சென்னையில் கலைஞர் புகைப்பட கண்காட்சி 7ம் தேதி வரை நீட்டிப்பு..!!