விதிகளை மீறி நியமனம் டெல்லி அரசு நியமித்த மகளிர் ஆணைய ஊழியர்கள் 52 பேர் நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடி

புதுடெல்லி: டெல்லி அரசால் நியமனம் செய்யப்பட்ட மகளிர் ஆணையத்தின் 52 ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஆளுநர் வினய் குமார் சக்சேனா உத்தரவு பிற்பபித்துள்ளார். டெல்லியில் ஒன்றிய அரசின் துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா பெரும்பாலான முடிவுகளை எடுத்தும், முக்கிய பொறுப்புகளுக்கு அதிகாரிகளை நியமித்தும் வந்தார். அவரின் செயல்களால் தலைநகர் டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில் டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா நேற்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதில், ‘‘டெல்லி மகளிர் ஆணையத்தில் டெல்லி அரசால் நியமிக்கப்பட்ட 52 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். குறிப்பாக துணை நிலை ஆளுநர் என்ற முறையில் என்னிடம் எந்தவித ஆலோசனையோ அல்லது அனுமதியோ பெறாமல் டெல்லி அரசால் நேரடியாக சட்டத்துக்கு புறம்ப்பாக இவர்கள் அனைவரும் பணி நியமனம் செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் கெஜ்ரிவால் இல்லாத நேரத்தில், துணை நிலை ஆளுநர் தற்போது எடுத்துள்ள இந்த நடவடிக்கை தலைநகர் டெல்லியில் மீண்டும் டெல்லி அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே அதிகார மோதலை மீண்டும் உருவாக்கி உள்ளது. மகளிர் ஆணைய முன்னாள் தலைவி ஸ்வாதி மாலிவால், விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமித்ததாக முன்னதாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியும் செய்யப்பட்டது. ஸ்வாதி மாலிவால் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியாக இருக்கிறார்.

Related posts

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லியில் பா.ஜ.க. அலுவலகத்தை ஆம் ஆத்மி கட்சி முற்றுகை

மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு அபாயம்; 3 நாட்கள் செல்ல வனத்துறை தடை விதிப்பு!