தினகரன் நாளிதழ் – சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி கண்காட்சி அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்: மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்த கல்வியாளர்கள்; பெற்றோர் மகிழ்ச்சி

* 2வது நாளாக இன்றும் நடக்கிறது
* நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் சார்பில் அரங்குகள்
* ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் திரண்டனர்

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தினகரன் நாளிதழ் – சென்னை விஐடி கல்லூரி இணைந்து 2 நாட்கள் நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பிரமாண்ட கல்வி கண்காட்சியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் திரண்டனர். பிளஸ் 2 முடித்து, அடுத்து என்ன படிக்கலாம், எந்த கல்லூரியில் சேரலாம் என்று காத்திருக்கும் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க ஒவ்வொரு ஆண்டும் தினகரன் நாளிதழ் சார்பில் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பிரமாண்ட கல்வி கண்காட்சி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை பொறுத்தவரை கல்வி என்பது மாணவர்கள் மதிப்பெண் எடுப்பது என்கிற அளவிலேயே இருக்கிறது என்றே சொல்லலாம். எனவே பிளஸ் 2 படித்து முடித்து தனது எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய படிப்பை தேர்வு செய்வது என்பது மாணவர்களிடையே மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோருக்கும் சவாலான விஷயமாகவே இருந்து வருகிறது. அந்த சவாலை சந்தித்து, தங்கள் வீட்டு செல்லங்களை எந்த பாடப்பிரிவில் சேர்க்கலாம் என்கிற கவலையை தீர்க்கும் அருமருந்தாக தினகரன் நாளிதழ் சார்பில் பிளஸ் 2 முடித்தவர்களுக்காக நடத்தப்படும் மாபெரும் கல்விக் கண்காட்சி மாணவர்களுக்கு பெரிதும் உதவுகிறது.

ஆண்டுதோறும் நடத்தக்கூடிய தினகரன் கல்விக் கண்காட்சியை, இந்த ஆண்டும் தினகரன் நாளிதழ் மற்றும் சென்னை விஐடி கல்லூரி இணைந்து ஏற்பாடு செய்து இருக்கின்றன. அதன்படி, தினகரன் நாளிதழ் மற்றும் சென்னை விஐடி கல்லூரி இணைந்து நடத்தும் பிரமாண்ட கல்வி கண்காட்சி தொடக்க விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. கண்காட்சியின் அரங்கத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தொடர்ந்து, தினகரன் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர். ரமேஷ் முன்னிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை விஐடி சார்பு துணை வேந்தர் டி.தியாகராஜன், ரெமோ கல்லூரி இயக்குநர் ரித்திக் பாலாஜி ஆகியோரும் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்றும், இன்றும் என இரண்டு நாட்கள் நடைபெறும் கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று காலை முதலே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் கல்வி கண்காட்சியை பார்வையிட குவிந்தனர். கிரிக்கெட் போட்டி, விடுமுறை நாள் மற்றும் வாட்டி எடுக்கும் கோடை வெப்பத்தை பற்றி கவலைப்படாமல் மாணவர்கள் பஸ், கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

குறிப்பாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த கல்வி நிறுவனங்களின் அரங்குகளில் பேராசிரியர்கள், கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருந்தனர். அவர்களிடம், பொறியியல், மருத்துவம், விமான தொழில்நுட்பம், அனிமேஷன், அயல்நாட்டு கல்வி, கலை அறிவியல், நர்சிங், ஊடகம், ஓட்டல் மேலாண்மை, கட்டிட கலை, புகைப்பட கல்வி, வர்த்தக கல்வி, கடல்சார் கல்வி, அழகு கலை, தீ மற்றும் பாதுகாப்பு, காலணி வடிவமைப்பு, பிளாஸ்டிக், பெட்ரோலியம், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த படிப்புகள் குறித்து மாணவ, மாணவிகள் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். பலர் கல்லூரிகளின் விளக்க குறிப்பு கையேட்டை பெற்றோர் வாங்கி சென்றனர்.

மேலும், மாணவர்களின் சந்தேகங்களையும் பேராசிரியர்கள் தெளிவுபடுத்தினர். மேல் படிப்பை எவ்வாறு தேர்வு செய்வது குறித்தும் பெற்றோர்களும், மாணவர்களும் தங்கள் சந்தேகங்களை கேட்டு தீர்வுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அந்தந்த கல்வி நிறுவனங்கள் சார்பில் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் அரங்குகளில் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அவர்கள் மாணவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை அளித்தனர். இதனால் மாணவர்கள் தங்கள் மனதில் எழுந்துள்ள அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைத்ததாக தெரிவித்தனர். மேலும், கண்காட்சியில் தொழில் நெறி வழிகாட்டு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுமட்டுமல்லாது, நீட் தேர்வு தொடர்பான விழிப்புணர்வு, போட்டோ கிராபி, கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் மட்டுமின்றி, தங்களின் நண்பர்களுடன் கண்காட்சிக்கு வந்திருந்ததால் அரங்குகள் முழுவதும் கூட்டம் அலைமோதியது. படிப்பு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பது மட்டுமின்றி, மாணவர்கள் வங்கியில் கல்வி கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் கண்காட்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதேபோல், எந்தெந்த படிப்புகளுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டில் எந்த வகையான வேலைவாய்ப்புகள் உள்ளன என்பது குறித்தும் பேராசிரியர்கள் மாணவர்களிடம் எடுத்து கூறினர்.

இதுதவிர கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை வழிமுறைகள் என்ன, எவ்வளவு கட்டணம் வரும், கல்வி உதவித் தொகையை பெறுவது எப்படி, கட்டண சலுகைகள் எவ்வளவு கிடைக்கும் என்பது போன்ற விவரங்களையும் தெரிந்து கொண்டனர். இதனால் தங்கள் பிள்ளைகளை எந்த படிப்பில் சேர்க்கலாம் என்பது குறித்து முடிவை எடுக்க இந்த கல்வி கண்காட்சி பெரிதும் உதவியாக இருந்ததாக அங்கு வந்திருந்த மாணவர்களும், பெற்றோர்களும் பெருமிதத்துடன் கூறினர். கூடுதலாக கண்காட்சியில் பங்கேற்ற கல்வியியல் ஆலோசகர்களிடம், ஒவ்வொரு படிப்பிற்கு ஏற்ற வேலைவாய்ப்பையும், பொதுவான தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகள் பற்றிய அனைத்து விவரங்களையும் மாணவர்கள் கேட்டு தெரிந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

* இன்றும் இலவச பஸ் வசதி
தினகரன் கண்காட்சிக்கு மாணவர்களும் பெற்றோரும் எளிதில் வந்து செல்ல இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பேருந்து நிற்கும் வழித்தடங்கள் பின்வருமாறு:
* வழித்தடம் 1 : கிண்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து கத்திப்பாரா, பட்ரோடு வழியாக நந்தம்பாக்கம் சென்றடையும்.
தொடர்புக்கு – 9710803680 / 7904202122
* வழித்தடம் 2 : பூந்தமல்லி பஸ் ஸ்டாண்டிலிருந்து குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், போரூர், ராமாபுரம் வழியாக நந்தம்பாக்கம் சென்றடையும்.
தொடர்புக்கு – 7010649976/ 8870897679
* வழித்தடம் 3 : கோயம்பேடு தலைமை தேர்தல் அலுவலகத்தில் இருந்து வடபழனி, லஷ்மன் ஸ்ருதி, அசோக் பில்லர், ஈக்காட்டுதாங்கல், பட்ரோடு வழியாக நந்தம்பாக்கம் சென்றடையும்.
தொடர்புக்கு – 8939479338/ 9146130950

* குளுகுளு வசதி
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்து வரும் பிரமாண்ட தினகரன் கல்வி கண்காட்சி ஹால் 3ஏவில் நடந்து வருகிறது. சென்னையில் தற்போது 100 டிகிரியை தாண்டி வெயில் மண்டையை பிளந்து வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் பொறுமையாக அமர்ந்து தங்கள் எதிர்காலத்தை தேர்வு செய்யக்கூடிய நிகழ்வு என்பதால் கல்வி கண்காட்சி நடைபெறும் அரங்கம் முழுவதும் குளுகுளு ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. பிரமாண்ட ஹால் என்றாலும் அனைத்திலும் முழு அளவில் ஜில்லென்ற ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் திரண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெயில் கொடுமை இல்லாமல் நிம்மதியாக தங்கள் சந்தேகங்களை பேராசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். இன்றும் காலை 10 மணிக்கு கல்விக் கண்காட்சி தொடங்குகிறது. மாலை 6.30 மணிவரை நடைபெறும்.

* வேலைவாய்ப்புக்கு ஏற்ற படிப்புகள்
பிளஸ் 2 முடித்து என்ன மாதிரியான உயர்கல்வியை தேர்வு செய்து படிக்க வேண்டும், என்ன படிப்புகளை படித்தால் உடனடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும், வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைக்க எந்த படிப்புகளை தேர்வு செய்யலாம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு என்ன படிப்புகளை தேர்ந்தெடுத்து படித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பது போன்று மாணவ, மாணவிகள், பெற்றோருக்கு ஏற்படும் பல்வேறு சந்தேகங்களுக்கு இந்த கல்வி கண்காட்சியில் பதில் கிடைத்ததாக பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Related posts

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது!

மே 15ம் தேதி தொடங்கவிருந்த அண்ணா பல்கலை. பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கர்நாடக பாஜக நிர்வாகி தேவராஜே கவுடா மீது வழக்குப்பதிவு