கடன் பிரச்னையில் பார் ஊழியர் மனைவி, மகனுடன் தற்கொலை

தேனி: சின்னமனூரில் வீடு கட்டியதில் ஏற்பட்ட கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்தவர் செவ்வத்திவீரன் (60), பார் ஊழியர். இவரது மனைவி ஒச்சம்மாள் (55). இவர்களது மகன் ராஜேஷ் (33). இவர் திருமணமாகி பெற்றோருடன் வசித்து வந்தார். செவ்வத்திவீரன் கடன் வாங்கி புது வீடு கட்டியுள்ளார். ஆனால், கடனை அடைக்க முடியாமல், கட்டிய வீட்டை விற்று கடனை அடைத்துள்ளார். இருப்பினும் கடன் பிரச்னை தீர்ந்தபாடில்லை. மேலும், வீட்டில் செய்முறை வைத்து, உறவினர்களிடம் மொய் வாங்கி கொஞ்சம் கடனை அடைத்துள்ளார்.

இந்நிலையில், உறவினர்கள் விசேஷம் வைக்கும்போது, அவர்களுக்கு மொய் செய்ய முடியாமல் தவித்துள்ளார். இந்நிலையில், மகனும் அதிகமாக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால், மகனுடன் மருமகள் தகராறு செய்துவிட்டு, அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஒருபுறம் கடன் பிரச்னை, மறுபுறம் மருமகள் பிரிந்து சென்ற பிரச்னை என பிரச்னைக்கு மேல் பிரச்னை ஏற்பட்டதால் செவ்வத்திவீரன், அவரது மனைவி, மகன் நேற்று இரவு தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

மூவரும் பாலில் விஷத்தை கலந்து குடித்துள்ளனர். இன்று காலை வீட்டின் கதவு 9 மணி வரை திறக்காததால், சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது மூவரும் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தது தெரிய வந்தது. தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து மூவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

காவிரி உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்

ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்