அணுமின் நிலைய நிர்வாகத்தை கண்டித்து ஒப்பந்த ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகத்தை கண்டித்து ஒப்பந்த ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களை அணுமின் நிலைய நிர்வாகம் பழிவாங்கும் செயலை கண்டித்தும், ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கி விட்டு, அதிலும் அவர்களிடம் லஞ்சம் பெறுவதை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. அப்போது, தொழிலாளர்களிடம் லஞ்சம் கேட்கும் ஒப்பந்ததாரர்களை கருப்பு பட்டியலில் சேர்த்து, அவர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதில், கல்பாக்கம் அட்டாமிக் எனர்ஜி கான்ட்ராக்ட் ஒர்க்கர்ஸ், லேபர் யூனியன் மற்றும் இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) சார்பில் கல்பாக்கம் அணுமின் நிலைய நுழைவு வாயில் எதிரே உள்ளே ரவுண்டானா அருகில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நேற்று காலை முதல் மாலை வரை நடந்தது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிஐடியு துணை தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். சிஐடியு மாநில செயலாளர் திருவேட்டை உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி வைத்தார். மாநில பொதுசெயலாளர் சுகுமாறன் நிறைவுரையாற்றினார். இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

ஆப்கானிஸ்தானில் நேற்று பெய்த திடீர் மழை, வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது

கொளத்தூரில் கட்டப்பட்டுவரும் புதிய சிறப்பு மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: தமிழ்நாடு அரசு

திருச்சி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்ததில் 2 பெண்கள் பலி