புதுடெல்லி: சட்டீஸ்கரில் மதுபான ஊழல் விவகாரத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அனில் துடேஜா மற்றும் அவரது மகன் யாஷ் மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. சட்டீஸ்கரில் 2019 முதல் 2022ம் ஆண்டு வரை ரூ.2000 கோடிக்கு மதுபான ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் அரசு உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் சிலர் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அனில் துடேஜா மற்றும் அவரது மகன் யாஷ் ஆகியோர் தங்கள் மீதான வழக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்னஜல் புயன் ஆகியோர் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு குற்றமும் நடந்ததற்கான ஆதாரமில்லை எனக் கூறி துடேஜா, யாஷ் மீதான வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.