பூந்தமல்லி: போரூர் அருகே, தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. திருவள்ளூர் மாவட்டம் பஞ்சப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(32) இவர் அப்பகுதியில் உள்ள கோயிலில் குருக்களாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை இவர் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை போரூர் சுங்கச்சாவடி அருகே காரில் சென்றார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து, சுங்கச்சாவடி அருகே உள்ள தடுப்பு சுவரில் மோதி, அதன் மேலே ஏறி நின்றது. இதில் காரை ஓட்டி வந்த கார்த்திகேயன் காயம் அடைந்தார்.
தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் கார்த்திகேயனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சாலையின் நடுவே தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.