ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரும், 13 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், இந்திய அரசியலின் திசையை தீர்மானிப்பவராகவும் திகழ்ந்த நூற்றாண்டு நாயகர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறையினர் என்றென்றும் நினைவில் போற்றும் வகையில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசால் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கலைவாணர் அரங்கத்தில் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த புகைப்பட கண்காட்சியில் கலைஞர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகள், அவற்றால் மக்கள் பெற்ற பயன்கள், இளமை காலம் முதல் அவர் மேற்கொண்ட அரசியல் பயணம், பல்வேறு அரசியல் மற்றும் முக்கிய தலைவர்களுடனான சந்திப்புகள் போன்றவை குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புகைப்பட கண்காட்சி ஜூன் மாதம் முழுவதும் மக்கள் பார்வையிடலாம்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும் அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மோகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.