அதன்படி கடந்த நவம்பர் மாதம் நடந்த பிரதான தேர்வின் முடிவுகள் கடந்த ஜனவரி 5ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சியடைந்தவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிரதான தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும், நேர்முக தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பிரதான தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த மனுக்களில், சீருடை பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் போட்டி தேர்வு விடைத்தாள்களை விண்ணப்பதாரர்களுக்கு வழங்குகின்றன. அரசு பணியாளர் தேர்வாணையம் மட்டும் விடைத்தாள்களை வழங்க மறுக்கிறது. எனவே, விடைத்தாள்களை வழங்க கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு தேர்வாணையத்திற்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபிக் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கும், சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கும் உத்தரவிட்டனர்.