திருமலை: ஆந்திராவில் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தெலுங்கு தேசம் கட்சி மாநாட்டில் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஏழைகளின் வருமானத்தை உயர்த்தும் விதமாக 5 ஆண்டுகளில் திட்டம் வகுத்து செயல்படுத்தப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் இணைப்பு வழங்கப்படும். ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.
மகாசக்தி என்ற பெயரில் ‘ஸ்த்ரிநிதி’யின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திலும் 18 வயது நிறைவடைந்த பெண்களின் வங்கிக் கணக்கில் மாதத்திற்கு ரூ.1500 நேரடியாக டெபாசிட் செய்யப்படும். ‘தீபம்’ என்ற திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். ‘இலவச பேருந்து பயணம்’ திட்டத்தின் மூலம் அனைத்து பெண்களுக்கும் உள்ளூர் பேருந்துகளில் டிக்கெட் இல்லா பயண வசதி வழங்கப்படும். வேலையில்லாத ஒவ்வொருவருக்கும் ‘யுவகலம் நிதி’யின் கீழ் தெலுங்குதேசம் அரசு மாதம் ரூ.3000 வழங்கும். இவ்வாறு அவர் அறிவித்தார்.